உலகளவில் முன்னிலைக்கு வந்தது இலங்கை
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொத்மலை பகுதியில் நேற்று (25) நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலான முன்மொழிவுகள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டார். இது குறித்துக் கூறிய அவர்,
“நாம் எதிரணியில் இருக்கும்போது, மக்களே எமக்கு நம்பிக்கையளித்தனர். எம்முடன் பயணித்தனர். அதனால் தான் குறுகிய காலத்துக்குள் கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தோம்.
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றோம். இவ்வாறானதொரு நிலைமையில் தான் கொரோனா நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இருந்தாலும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நிதி நெருக்கடி இருந்தால் கூட சுகாதார அமைச்சால் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால் தான் இவ்வாறு நடைபெறுகின்றது.
நாட்டை மூடுமாறு சிலர் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு மாதம் அரசாங்க சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் நாட்கூலி பெறுபவர்களின் நிலைமை?
நாடு தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது. வைத்தியசாலைகளில் இடமும் உள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே அமையும்.
எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள்” என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.