சிறிலங்காவில் விரைவில் சீனாவின் மற்றுமொரு பாரிய முதலீடு
ஸ்ரீலங்காவில் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான முதலீடுகளை விரைவில் சீனா மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறிய சீனாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் கலாநிதி பாலித கோஹன, விரைவில் சீன முதலீட்டிற்கான வேலைத்திட்டங்கள் செயல் வடிவம் பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டு திட்டம், ஹம்பாந்தோட்டையில் சைனோபார்ம் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை, பாதுகாப்பு கண்ணாடித் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கொழும்பின் தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீனாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் பாடசாலைகளில் ஸ்மார்ட் கிளாஸ் றூம் என்ற நவீன தொழில்நுட்ப வகுப்பறை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது.
அதேபோன்று நவீன தொழில்நுட்ப விவசாய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும் நாரஹேன்பிட்டியில் ஒரு தொடர் மாடி கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளதாகவும் பாலித கோஹண சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் இந்த அனைத்து முதலீடுகளும் கடன் அல்ல எனவும் இந்த திட்டங்களுக்கான நிதி முதலீடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் சைனோபாம் தடுப்பூசிகளை தயாரிக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்ய முடியுமெனவும், இதன் ஊடாக ஸ்ரீலங்காவின் டொலர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தம்மைப் பொறுத்தவரையில் கடன் பெறுவதை விட முதலீட்டு திட்டங்களை பெறவே முயற்சிக்க வேண்டும் என கூறிய பாலித்த ஹோகன, சீனாவின் முதலீடுகளால் ஸ்ரீலங்காவிற்கான அந்நிய செலாவணி வருமானமும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.
அந்த வகையில் முதலீடு செய்வது தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்ததும் இந்த திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் எனவும், சீனாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் கலாநிதி பாலித கோஹன மேலும் தெரிவித்துள்ளார்.