அதிகரிக்கும் பேருந்து கட்டணம்! சற்று முன் வெளியாகிய அறிவித்தல்
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 25 - 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விலைசூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டீசல் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையானது பேருந்து கட்டணங்களின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கெமுனு விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கலந்துரையாடுமாறும் அமைச்சர் போக்குவரத்துத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதையடுத்தே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா IOC நிறுவனமும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.