கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் நிலவி வரும் கடுமையான ஆளணி வளப் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில் தகமையுடைய வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட அந்தஸ்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
இதனால், எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் கனடாவில் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து லட்சம் குடியேறிகள்
ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏதிலிகள் மற்றும் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் 76000 ஏதிலிகளுக்கும், 2025ஆம் ஆண்டில் 73000 ஏதிலிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
ஏதிலிப் பிரச்சினைகளுக்கு தீர்வு
வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு குடிவரவு, குடியகழ்வு மற்றும் ஏதிலிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி கனடாவில் குடியேறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்காது விரைவில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.