தமிழர்கள் தொடர்பிலும் இலங்கை குறித்தும் கனடா பிரதமர் வெளியிட்ட அறிவித்தல்!
இலங்கையர்கள் ஒரு அமைதியான, நிலையான நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து 13ஆவது ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கை போரால் ஏற்பட்ட வேதனை, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் தொடர்ந்து மக்கள் அவதியுறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை இலங்கை அரசு உறுதி செய்யவேண்டும்.
வன்முறையைக் கையில் எடுக்கவேண்டாம் என அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழர்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் நிலையான ஒரு நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள்.
கனேடிய தமிழர்களான எங்கள் அயலகத்தாருக்கும், இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் எங்கள் ஆதரவை வழங்குவோம்.
கடந்த கால துயரங்களைக் குறித்து அறிந்துகொள்ளுதல் முதலான விடயங்கள் மூலம், அவை மீண்டும் நடக்காமல் இருப்பதையும், அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதையும் உறுதி செய்ய, அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும்", எனக் குறிப்பிட்டார்.