புலம்பெயர்ந்தோரால் இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம்
இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்படும் அந்நிய செலாவணியானது வருடாந்த அடிப்படையில் 50 வீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.
ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இலங்கை மத்திய வங்கி முயற்சித்த போதிலும், அந்நிய செலாவணி வருமானத்தில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் மதிப்பு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளமைக்கு மத்தியில் டொலர்களை ஈர்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் கடந்த மார்ச் மாதத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ரூபாயை மிதக்கும் முடிவைத் தொடர்ந்து பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கை எதிர்பார்த்த பலன்களை வழங்குவதற்கு தவறியிருந்தது.
2022 இன் முதல் மூன்று மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டிற்கு கிடைத்த அந்நிய செலாவணி 783 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.