கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் - முதல்வர் விஜய்
கோவையில் சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவை சூலூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி கடைக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளார்.
தீவிர விசாரணை
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தன.
இதன்பின்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கடும் தண்டனை
பின்பு கார்த்திக் என்ற 33 வயது நபரையும் அவருக்கு உதவியாகச் செயற்பட்ட மோகன் ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என முதல்வர் நேற்று (23-05-2026) தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (24-05-2026), கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உரையாடியுள்ளார்.
இதன்போது, சிறுமியின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் எனப் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |