டொலர் நெருக்கடியை தீர்க்க அங்கு செல்வதை தவிர மாற்று வழி இல்லை -ரணில்
நாட்டின் கடுமையான டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) செல்வதன் மூலம் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் உலக நாடுகள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பணிநீக்கம் போன்ற நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்காது என்றும் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் அரசாங்கம் கிட்டத்தட்ட 6 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்க கூறினார்.
இன்று (25) காலை Zoom தொழில்நுட்பம் ஊடாக கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்நிய செலாவணி பாரிய நெருக்கடியாக மாறியுள்ள இவ்வேளையில் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும்போது இலங்கைக்கு கடன் வழங்க முன்வரும் என விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கான உத்தரவாதமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் ரூபாவின் பெறுமதியை 240 ஆக வைத்திருக்க முடியும் என்றாலும், சர்வதேச நாணய நிதியத்துடன் வர்த்தகம் செய்யாவிட்டால் ஒரு டொலருக்கான தொகை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.