அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
சம்பளம்
அரச ஊழியர்களுக்குரிய சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கருத்து தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த முடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாக அறிவித்தீர்கள்.
எதிர்வரும் 25ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். எனவே இந்த மாதத்துக்குரிய சம்பளம் அவர்களுக்கு கிடைக்குமா என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்ட இணக்கத்தின் பிரகாரம் பணத்தை அச்சிட முடியாது என்று தெரிவித்திருந்தீர்கள். என்ற போதும் நாம் வினவியபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை. வெளிப்படுத்த ஒன்றும் இல்லை என்றீர்கள்.
இந்த முன்னுக்குபின் முரணான விடயம் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளிக்கும் போது,
மூலதன செலவுகளை குறைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம்
இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் கடன் பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கமும் 1.5 பில்லியன் டொலரை கடனாக பெற்றது. அவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும், ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
அத்துடன், அரசாங்கம் ஒரு போதும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை தவிர்க்காது.
இம்மாதம் இக்கட்டான சந்தர்ப்பங்களில் வேறு செலவுகளை குறைத்து, அதனூடாக சம்பளம் வழங்கப்படும்.
தற்போது, பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அதற்குரிய கொடுப்பனவுகள் ஊடாகவும், மூலதன செலவுகளை குறைத்தும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு நிதி முகாமைத்துவம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.