நிலைமை மோசமடையும் - எச்சரிக்கிறது பிரித்தானியா
சட்டவிரோத குடியேறிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கத் தவறும் பட்சத்தில் குளிர்காலத்தில் ஆங்கில கால்வாயில் நிலைமைகள் மேலும் மோசமடையும் என பிரித்தானியா எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவின் உள்விவகார செயலாளர் பிரீத்தி பட்டேல், இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜேர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு பிரநிதிகள் பிரான்ஸ்சில் சந்தித்து பேச்சு நடத்தப்படவுள்ள நிலையில், பிரீத்தி பட்டேல் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஆகியோருக்கு இடையில் கருத்துவேறுபாடு தீவிரமடைந்ததை அடுத்து, இந்தச் சந்திப்பு தொடர்பில் பிரீத்தி பட்டேலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மீளப் பெறப்பட்டிருந்தது.
எனினும் சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினையை சமாளிக்கும் விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப் போவதாக ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரான்ஸ் அதிபருக்கு அனுப்பிய கடிதத்தை பிரித்தானியப் பிரதமர் பகிரங்கமாக பகிர்ந்திருந்தார்.
பிரித்தானியப் பிரதமரின் இந்தச் செயற்பாடு, பிரான்ஸ் அதிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இந்த நெருக்கடி விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம், இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பது உறுதியாகியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் விமர்சனம் வெளியிட்டிருந்தார்.
எனினும் கலேய்யில் நடைபெறும் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் கலந்து கொள்ளாவிட்டாலும், பிரித்தானியா சார்பில் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.