தமிழர் பூர்வீகத்தில் பௌத்த ஆக்கிரமிப்பு - விசாரணைகளின் போது காவல்துறை தடுமாற்றம்
நீதிமன்ற கட்டளையை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறையினருக்கு கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணைகளின் போது காவல்துறையினர் தடுமாற்றை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் 30 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
தமிழர் பூர்வீக வழிபாட்டிடத்தில் பௌத்த ஆக்கிரமிப்பு
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடங்களில் ஒன்றான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு காவல்துறையினர், ஆலய நிர்வாகத்தினர் மீது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் மூலம், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 16 ஆம் திகதி விசாரணைக்கு கோரியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றுக்கு வழங்க வேண்டிய அறிக்கைகளை மறைத்திருந்தமை இதன்போது தெரியவந்திருந்தது.
நீதிமன்றில் காவல்துறை தடுமாற்றம்
இதனையடுத்து தமது தரப்பு விளக்கத்தை வழங்குமாறு நீதிமன்றம் இன்றைய தினத்தை திகதியிட்டிருந்த நிலையில், இன்றும் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு காவல்துறையினர் தவறியுள்ளனர்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக இன்றைய இன்றைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பதினோரு பேர் முன்னிலையாகினர்.
இதேவேளை, காவல்துறை தரப்பில் விளக்கமளிப்பதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் சமுத்திர ஜீவ, முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி கலும் சி திலகரத்ன முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் லசந்த விதானகே, மாவட்ட தலைமை காவல்துறை பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகிய போதிலும் உரிய பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.