தொடர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி - குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளை!
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குருந்தூர்மலை விவகாரத்தில் கடந்த 19.07.2022 அன்று வழங்கிய நீதிமன்ற கட்டளையினை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும்.
நீதிமன்றின் கட்டளை
அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறை உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று கட்டளைகளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை தீர்ப்பு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவால் வழங்கப்பட்டது.
இன்று முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு இலக்கம் AR / 673 மீதான கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவால் வழங்கப்பட்டது.
கட்டளையை மீறி கட்டுமானங்கள்
2018 ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில் தொல்லியல் ஆய்வு எனும் பெயரில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பிரதிவாதிகளாலும் வழக்கு தொடுனர்களாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்துள்ளன.
இதன் தொடர்சியாக இந்த வழக்கில் பல்வேறு கட்டளைகளை நீதிமன்றம் வழங்கி வந்த நிலையிலும் அந்த கட்டளைகளையும் மீறி பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.
இவ்வறான நிலையிலேயே இன்றைய தினம் நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கிள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.