ரவிகரன் மற்றும் மயூரன் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
இரண்டாம் இணைப்பு
துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேலும் பலரை கைது செய்யும் முயற்சியிலும் காவல்துறையினர் தீவிரமாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரன்
இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் காவல் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரையும் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் மக்கள், எதிர்ப்பு போராட்டமொன்றுக்கு தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.