வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அனர்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'இடர் முகாமைத்துவக் குழுக்களை' தொடர்புகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (02) காலை ஆளுநர் செயலகத்தில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நடைபெற்ற அவசர கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடர் முகாமைத்துவக் குழு
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உண்மையான தேவைகளை அறிந்து உதவுங்கள். இதற்கு மாவட்டச் செயலகங்களில் உருவாக்கப்பட்டுள்ள 'இடர் முகாமைத்துவக் குழுக்களை' அணுகுங்கள்.

வெளிநாடுகளில் நிதி திரட்டி, பெயரளவில் உதவிகளைச் செய்துவிட்டுப் புகைப்படங்களை மட்டும் அனுப்பும் மோசடிக் கும்பல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்.
மாவட்டச் செயலகத்தின் பரிந்துரை அல்லது அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அணுகுபவர்களிடம் கவனமாக இருக்கவும்.
மக்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். எனவே, உணவுப் பொதிகளைத் தாண்டி, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவது பயனுள்ளதாக அமையும்.
அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுக்கு மேலதிகமாக, மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய அவசியமான உதவிகளை (Gap filling) தன்னார்வலர்கள் பொறுப்பேற்பது சிறந்தது." என தெரிவித்தார்.
மாவட்டச் செயலக அதிகாரிகள்
இதேவேளை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க விரும்புவோர் பின்வரும் மாவட்டச் செயலக பதவிநிலை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் : சுரேந்திரநாதன் - 077 484 0199
கிளிநொச்சி : அஜித்தா - 077 565 0671
மன்னார் : பிரதீப் - 071 990 5324
வவுனியா : கமலதாசன் - 077 613 8369
முல்லைத்தீவு: ரஜினிகாந்த் - 077 370 7720 / கோகுலராஜ் - 077 395 7886
“மேற்படி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் பொருட்களை ஒப்படைக்க முடியும் என இன்றைய கூட்டத்தில் கருத்துறைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாட்டில் உள்ள ஆலயங்கள் , அறக்கட்டளைகள் , உதவி அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் கொள்வனவு செய்து பொருட்களை ஒப்படைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் பற்றிய விபரங்கள்
கொள்வனவு செய்யப்பட்ட விலைச்சிட்டை , பொருட்கள் விபரம் , மற்றும் அவற்றின் படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி , பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சிக் கடித்தினை அரச இலச்சினைக் கடித்தில் கையோப்பம் இட்டு , குறித்த அலுவலர் அமைப்புக்களுக்கு வழங்குவார்.

அத்தோடு பெறப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்களும் மாவட்ட அரசாங்க அதிபரின் இணையத்தளத்திலும் பிரசுரமாகும் . இதன் மூலம் முகவர்கள் சிலரது மோசடிகளும் தவிர்க்கப்படும் .
தேவையற்ற போக்குவரத்து செலவீனமும் தவிர்க்கப்படும் . புலம்பெயர் ஆலயங்கள் அறக்கட்டளை அமைப்புக்கள் என்பனவும், தமக்கு பணம் வழங்கிய புலம்பெயர் மக்களுக்கும் இவற்றை சமர்ப்பிக்க முடியும்.
இதன் மூலம் மேலும் அமைப்புக்கள் மீது நம்பகத்தன்மை கட்டியெழுப்பபடும் . அதிகாரிகளால் பெறப்பட்ட பொருட்கள் பிரதேச செயலாளர் , கிராம அலுவலர் ஊடாக தேவையுள்ள மக்களுக்கு பொருட்கள் சென்று சேரும் .
இதற்கான ஆவணங்கள் கிராம அலுவலர் , பிரதேசெயலாளர் ஆகியோரால் பராமரிக்கப்படும் . நம்பகத்தன்மை அற்ற முகவர்கள் , மற்றும் சிலரிடம் பணத்தையோ பொருளையோ வழங்கி , புலம்பெயர் மக்கள் ஏமாறாமல் இந்த கட்டமைப்பு ஊடாக செயலாற்றுவது மோசடிகளை தவிர்க்க உதவும் . இதனை கருத்தில் கொள்ளவேண்டும்”
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


