“2023இல் அரச தலைவர் தேர்தல்” களமிறங்கும் புதிய முகம்?
இலங்கையில் அடுத்த அரச தலைவர் தேர்தல் 2023ஆம் ஆண்டு இடம்பெறும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் அத்தேர்தலில் களமிறக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களைப் போல் யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை? அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
ராஜபக்சாக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள். மக்கள் நலன் சார்ந்து செயற்பட மாட்டார்கள் என்பதே உண்மை” என்றார்.