பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்! கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு
பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்அரசதலைவர் இதனை கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசும் மக்களும் அவதானித்து வருகின்றனர்.
அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம், இந்த மிலேச்சத்தனமான கொலை சம்பவம் சம்பவம் நடந்ததும் உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுகிறது.
எந்த அடிப்படையில் வந்தாலும், அடிப்படைவாதச் செயற்பாடுகள் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றன. அதனால், அடிப்படைவாதத்துக்கு எதிராக முழு உலகமும் ஒரே நோக்கத்துடன் நின்று செயற்பட வேண்டுமென்பதை இவ்வாறான விடயங்கள் உறுதி செய்கின்றன.
இந்த துரதிர்ஷடவசமான செய்தியினால் பாரிய அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள பிரியந்த குமாரவின் குடும்பத்தினருடன் நானும் அரசாங்கமும், இலங்கை நாட்டின் அனைத்து மக்களும் இருப்பதாக நினைவூட்டுகிறேன் என அந்த அறிக்கையில் அரசதலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் "அவமானத்தின் நாள்" என்று வர்ணித்துள்ளார்.