பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தேரர்! 10 வருட சிறை தண்டனை ரத்து
கடுமையான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பதின்ம வயது சிறுவனின் சாட்சியங்களில் காணப்பட்ட முக்கிய முரண்பாடுகள் காரணமாக, அவனது வாக்குமூலம் "நம்பகத்தன்மையற்றது" எனக் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், விகாரையின் குடியிருப்புப் பகுதிக்குள் 13 வயது சிறுவன் ஒருவனைத் துஷ்பிரயோகம் செய்ததாக சீதாவக்க சொரத்த தேரோ என்ற தேரருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவனின் வாக்குமூலங்களில் முரண்பாடு
இது தொடர்பான வழக்கை விசாரித்த அவிசாவளை உயர் நீதிமன்றம், குறித்த தேரரை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்திருந்தது.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து சாட்சியமளித்த சிறுவனின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் மற்றும் மாற்றங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டிய இரண்டு நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் முழுப் பின்னணியும் விகாரையைக் கடந்து நடந்து சென்றபோது தான் உள்ளே அழைக்கப்பட்டதாகக் கூறிய அந்தச் சிறுவனின் சாட்சியத்தையே பெரிதும் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், மேல்முறையீட்டு விசாரணையின் போது, சிறுவன் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திற்கும், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே காவல்துறை மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிடம் (JMO) அவன் அளித்த ஆரம்பகட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதை குற்றஞ்சாட்டப்பட்ட தேரரின் சட்டத்தரணிகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தரவு முழுமையாக ரத்து
சம்பவத்தின் அடிப்படைப் பின்னணியைக் கூட சீராக நினைவுகூர முடியாமல் போனதால், அது ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மீதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஒரே சம்பவத்தைப் பற்றி வெவ்வேறு காலக்கட்டங்களில் முரண்பட்ட தகவல்களை வழங்கும் ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்குத் தண்டனை வழங்குவது பாதுகாப்பானது அல்ல என்ற சட்ட முன்னுதாரணத்தையும் நீதிமன்றம் மீண்டும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, சீதாவக்க சொரத்த தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் இழப்பீடு வழங்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு ஆகியவற்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அவிசாவளை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |