இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகளை பாடசாலை திறக்கப்பட்ட பின்னரும் புறக்கணிக்க பெரும்பாலான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், தாம் அதில் இருந்து விலகி கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
சம்பள உயர்விற்கு தாம் முரணானவர்கள் அல்லவெனக் குறிப்பிட்டுள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன், யுத்த சூழ்நிலையில் கூட கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்தாத நிலையில், பிள்ளைகளின் கல்வியை பணயம் வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஆசிரிய - அதிபர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தமது சங்கம் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டுமெனவும், இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.