நாட்டைக் கட்டியெழுப்ப நாம் தயார் - சஜித்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திறன் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கொள்கையை முன்வைக்க தயாராகவுள்ளதாக கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் வெற்றிகரமான பொருளாதாரப் பயணத்தை நடைமுறைப்படுத்தும் பொருளாதாரக் குழுவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பயனுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வுகளை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். எங்களிடம் அதேற்கேற்ற திறமையான மற்றும் தகைமையுள்ள குழு உள்ளது.
பொருளாதார மறுமலர்ச்சியை நடைமுறைப்படுத்துவதுடன், இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்நாட்டில் பொருளாதார சீர்திருத்தத்திற்கான அணுகல் எமக்கு தேவையாகவுள்ளது.
மக்கள் அபிப்பிராயத்தின் பிரகாரம் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கிய வண்ணம் சிறந்த கொள்கைகளை கடைபிடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, இந்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை, அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம்.
அதற்கேற்ற மூன்று நபர்களைக் கொண்ட குழுவும், தேவையான பின்னணி பலத்தை வழங்கும் புலமைத்துவ குழுவும் இணைந்து செயற்படுகின்றன.
குறிப்பாக,நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முற்போக்கான வேலைத்திட்டத்தின் தெளிவை முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் ” என்றார்.