வெளியேறத் தயாராகும் சுதந்திரக் கட்சி- தாமதப்படுத்திய கோட்டாபய!
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், அரச தலைவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன, சொந்தக் கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சை நீள்கின்ற நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான மோதல்களைத் தவிர்க்குமாறு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மைய நாட்களில் ஆலோசனை வழங்கிய பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து மரியாதையுடன் வெளியேற சுதந்திரக் கட்சியை அனுமதிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
எவ்வாறாயினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையானது பொதுஜன பெரமுனவுடன் பிளவுபடுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அனைத்து சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதும் சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடும் என்றாலும், சில சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றாலும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அமர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன சில சிறுபான்மைக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதோடு, சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் பட்சத்தில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ஆதரவளிப்பதற்கு தயார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை மாற்றத்தில், புதிய முகங்களும் முக்கிய பொறுப்புக்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, சில இராஜாங்க அமைச்சுகள் மேலும் பலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.