சிறிலங்காவிற்கு எதிராக அதிரடியாக வழக்குத் தொடுத்தது சீன நிறுவனம்!
சிறிலங்காவிற்கு எதிராக சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் சீனா வழக்குத் தொடர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மூவர் அடங்கிய நடுவர் குழாம் ஒன்றின் மூலம் இந்த முறைப்பாடு விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒருவரை நியமிக்க முடியும் எனவும் சீன நிறுவனம் கோரியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீனவின் Quingdao Seawin Biotech நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் சிறிலங்காவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
சிறிலங்காவின் Colombo Commercial Fertilizers Ltd நிறுவனத்திடமே சீன நிறுவனம் நட்டஈடு கோரியுள்ளது.
உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்யும் வகையில் இலங்கை, தமக்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உடன்படிக்கையில் காணப்பட்ட ஒர் பிழையினாலேயே சீன நிறுவனம் சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.