இந்தியாவை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ் - இலங்கைக்கும் எச்சரிக்கை
இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கை வந்தால், அந்த வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் உள்ளது.
நுளம்புகள் மூலம் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் கேரளாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்திலிருந்து எவராவது ஒருவர் இலங்கை வந்தால் அவர் ஸிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரா? என்பது குறித்து உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், கண் சிவத்தல், உடல் உளைச்சல் உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
எனவே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1947 ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஸிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.