கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்
கனடாவிற்கு புலம்பெயரும் நோக்குடனேயே தன்னை தர்ஷிகா திருமணம் செய்ததாக தனது மனைவியான தர்ஷிகாவை கொலை செய்த இலங்கைத் தமிழரான தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 2019ல், பிரிந்த தனது மனைவியை வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வழக்கு விசாரணை ஆரம்பம்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமானது. நேற்றைய விசாரணையின் போது காவல்துறையினர் தனபாலசிங்கத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான காணொளி நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அதில் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தனபாலசிங்கம் பேசினார். அப்போது நீங்கள் என்னை ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் எதுவும் செய்யவில்லை.
சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது
ஒரு சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது, எனது மனைவி என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக மட்டுமே என்னை தர்ஷிகா திருமணம் செய்ய நினைத்தார். ஏற்கனவே முன்னர் என்னை அவர் தாக்கிவிட்டு நான் அவரை அடித்ததாக பொய் புகார் அளித்தார் போன்ற விடயங்களையெல்லாம் பேசியிருந்தார். தனபாலசிங்கம் குடும்ப நண்பரான சோமகல சோமகாசனின் சாட்சியமும் அரச சட்டத்தரணி அன்ட்ரூ பில்லாவினால் வாசிக்கப்பட்டது.
ஆரம்ப விசாரணையில் சோமகாசன் சாட்சியம் அளித்தார், ஆனால் சிறிது காலத்திற்கு பின் அவர் உயிரிழந்துவிட்டார். சோமகாசன் அதில் கூறுகையில், தர்ஷிகா திருமண பந்தத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனபாலசிங்கத்தை சந்தித்து மத்தியஸ்தம் செய்ய தான் அழைக்கப்பட்டதாக கூறினார்.
அப்போது கோபப்பட்ட தனபாலசிங்கம், நான் அவளை அப்படியே விட விரும்பவில்லை என்று கூறினார். மேலும், நான் தர்ஷிகாவை கொல்லப் போகிறேன். அவள் எனக்காக இல்லை என்றால், யாருக்காகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தாக கூறியிருந்தார்.
தர்ஷிகாவை கொன்றது தனபாலசிங்கம் தான்
செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கமராவில் பதிவானது, அந்த வீடியோவில் தர்ஷிகாவை கொன்றது தனபாலசிங்கம் தான் என்று நீதிமன்றம் மற்றும் அரசு தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதே சமயம் கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருந்ததா என்பதை நீதிபதி தீர்மானிக்க வேண்டும் என கூறப்பட்டது.
காணொளி காட்டப்பட்ட பின்னர், தனபாலசிங்கம் தவறு செய்தாரா மற்றும் அவர் குற்றவாளியா என்பது குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடர்ந்து நடக்கவுள்ளது.