வேலையற்ற இளைஞர் யுவதிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
வடக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பள்ளிககார தெரிவித்தார்.
இன்றையதினம் யாழ்ப்பாண காவல் நிலையத்தில், தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஜீவன் தியாகராஜா ஆராயும் கூட்டம் நடைபெற்றது.
இதன் பொது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முதல் முதலில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கடற்படை, விமானப்படை உதவி மற்றும் ராணுவத்தினருடன் ஒன்றிணைந்து ஒரு சந்திப்பினை மேற்கொண்டார்.
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகள் குழுக்களிடையே வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
குறிப்பாக கடல் பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் இந்தப் பகுதிகளிலிருந்து வரும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆராய்ந்தார். அதனை எவ்வாறு கடற்படையின் உதவியுடன் தடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்ததோடு இந்தப் பிரதேசங்களில் இந்தியாவிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பில் கடற்படையினரின் தகவல் வழங்கப்பட்டால் எவ்வாறு அதனை தடுத்து நிறுத்த முடியும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதில் தற்போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். கைது செய்யப்படும் போது போதைப் பொருளோடு தொடர்புடையவர்கள் சார்பான சிறைச்சாலையில் புனர்வாழ்வு அளிக்க முடியுமா என யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
சமூக பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் இந்த குழுக்களுக்கிடையிலான வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் அத்தோடு ஏனைய குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார்.
தற்போது இளைஞர் யுவதிகளுக்கு வேலையற்று உள்ளவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்குரிய வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சுடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அவர்களை விசேட வேலைத் திட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கான திட்டத்தையும் தான் செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடங்களில் வெளிவரும் சில செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பிலும் அதனை தடுத்து நிறுத்துதல் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவரும் சில தகவல்கள் செய்திகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் சில திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பில் ஆராய்ந்ததோடு தடைசெய்யப்பட்ட அநாவசியமான செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடல் போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடினார்.
அப்போது நாங்கள் கூறினோம் எமக்கு மொழி பிரச்சனை ஒன்று காணப்படுகின்றது. நமக்கு தமிழ் தெரிந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது எனவே அதற்கு தமிழ் காவல்துறையினர் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றதுஎனவும் தங்கள் கோரிக்கை விடுத்தோம் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.