கனடாவில் உயர்பதவியில் இருந்து உயிரிழந்த தமிழனுக்கு முல்லையில் அஞ்சலி
முல்லையில் பிறந்து கனடாவில் உயர் பதவி
முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டு கனடாவின் படைப்பிரிவில் உயர்பதவி வகித்து அகால மரணமடைந்த தமிழருக்கு அவரது சொந்த இடமான முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாக கொண்ட மதியழகன் விஜயாலயன் என்பவரே உயிரிழந்தவராவார்.
புலம்பெயர்ந்து கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாக கொண்ட அவர் கனேடிய இராணுவத்தில் பணி புரிந்ததுடன், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியாகவும், ஒட்டாவா மாகாண காவல்துறை உயர் அதிகாரியுமாக கடமையாற்றினார்.
இவ்வாறு பணிபுரிந்து வந்தவேளை கடந்த 14 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று மாலை கனடாவில் இராணுவ மரியாதையுடன் அவரது சடலம் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் அவரின் பிறந்த இடமான முல்லைத்தீவில் நாளை காலை 10.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஹரி ஆனந்த சங்கரி அஞ்சலி
அவரின் உயிரிழப்பிற்கு கனேடிய நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது அஞ்சலியில், “கனேடிய தமிழனான மதியழகன் விஜயாலயன் கனடாவில் இராணுவத்தில் இணைந்து 2018 கலப்பகுதியில் உக்ரைனில் operation unifier என்ற நடவடிக்கையில் சிறந்த வீரனாக கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் படைகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் தனது திறமைகளை காட்டினார்.
அத்துடன் அவரின் அபார திறமையால் பல உக்ரைனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்தார். பின்னர் தனது கடமைகளை முடித்து 2020 இல் ஒட்டாவா காவல்துறை சேவையில் இணைந்த அவர் தனது கடமைகளை சிறப்பாக செய்தார்.
நேர்மையாகவும் அன்பான இயல்பும் மற்றும் தன்னலமற்ற தன்மையும் கொண்ட இவர், ஒட்டாவா மக்கள் மனதில் என்றும் இருப்பார் என்று ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஒட்டாவா காவல் சேவைகள், அவரது நெருங்கிய ஒட்டாவா தமிழ் சமூகம் மற்றும் கனடா முழுவதும் வளர்ந்து வரும் தமிழ் மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை விட்டு செல்கிறார் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது இரங்கலில் தெரிவித்தார்.