ராஜபக்ச அதிகார மையத்துக்கு அதிர்ச்சி கொடுத்தது அமெரிக்கா!!!
அனைத்துலக அரங்கில் அடுத்தடுத்து கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரச தலைவர் எடுத்த ஒரு அதிரடியான நகர்வின் மூலம் சிறிலங்கா ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்டு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள உலகின் ஜனநாயகம் தொடர்பான உச்சிமாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமை ராஜபக்ச அதிகார மையத்துக்கு புதிய அதிர்ச்சியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் Summit for Democracy அல்லது ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டு என்ற கருப்பொருளில் ஒரு முக்கியமான மாநாடு அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனால் நடத்தப்படவுள்ளது.
மெய்நிகர் வழியாக நடத்தவுள்ள இந்த மாட்டில் பங்கெடுக்கஉலகின் 109 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் சிறிலங்கா புறக்கணிக்கபட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் சிறிலங்கா ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது அனைத்துலக அரங்குக்கு பகிரங்கப்படுத்தபட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக நேற்று ஸ்கொட்லாந்து காவற்துறை அறிவித்த நிலையிலும், சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா தனது பூகோள மனித உரிமை நிலைமை அறிக்கையிடலில் தெரிவிக்கப்பட்ட பின்னணியிலும் இந்த புதிய நகர்வு அமெரிக்காவில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவின் பங்காளி நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்த மாநாட்டுக்கு தாய்வானுக்கு அழைப்பு விடுத்தமை குறித்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தமிழர்தரப்பு அண்மைய நாட்களில் பேச்சுக்களை நடத்திய காலகட்டத்துக்கு சமாந்திரமாக சிறிலங்காவுக்குரிய அழைப்பு மறுப்பு வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.