சர்வதேசங்கள் அணிதிரண்டு தமிழர் தாயக ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் - வழங்கப்பட்ட உறுதி!
சிறிலங்கா அரசு கடும் போக்குடன் மேற்கொள்ளும், தமிழர் தாயக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்வை வென்றெடுக்கவும் சர்வதேச நாடுகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவிற்கான கனேடியத் தூதுவர் மற்றும் ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமாகியது. அதன் போதே கனேடிய மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்களை சந்தித்து மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த தமிழரசு கட்சி
கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
தூதுவர்களுடான சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய ஆஸ்திரேலியத் தூதுவரையும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது.
இதன் போது, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
வடக்கு கிழக்கு பௌத்த மயமாக்கல்
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசினோம்.
அதுமட்டுமன்றி, இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டுப் பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.
தீர்வு
இவ்வாறு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் தாம் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என கனேடிய, ஆஸ்திரேலியத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்” எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், சம்பந்தனுடனான கலந்துரையாடல் 4.30 மணியளவில் ஆரம்பமாகி, ஒரு மணிநேரம் இடம்பெற்றது. அதையடுத்து மாலை 5.30 மணிக்கு ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸும் சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
