நேபாளத்தில் அதிசயம் - 9 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு - வைரல் காணொளி
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சிதைந்திருந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
திரிசூல் 3A சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், மேலும் பல குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தோளில் சுமந்து வரப்படும் காணொளி
இவ்வாறான பின்னணியில், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள், திரிசூலி 3A நீர்மின் திட்டத்திலிருந்து சேறு படிந்த தொழிலாளர்கள் மீட்பாளரின் தோளில் சுமந்து வரப்படும் காணொளிகளையும் படங்களையும் ஒளிபரப்பின. மீட்பாளர்கள் இதை ஒரு "அதிசயம்" என்று வர்ணித்தனர்.

மீட்கப்பட்ட இருவர் கபீர் மகர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் தெரிவித்தார்.
30 வயதான ஷா, நேபாள மின்சார ஆணையத்தில் (NEA) இயந்திரப் பணி மேற்பார்வையாளராகவும், 45 வயதான மகர்ஜன், திரிசூலி-3 'ஏ' நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராகவும் உள்ளனர்.
வெள்ளம் சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மூடிய பிறகு, அதனுள் தவழ்ந்து சென்றதால் இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் மனம் இலகுவாகிவிட்டது," என மீட்கப்பட்ட பணியாளர் கபீர் மஹர்ஜனின் சகோதரர் அமீர் மஹர்ஜன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
புதிய நம்பிக்கை
சீனா - நேபாள எல்லையில் உள்ள மலையில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் மண் மற்றும் இடிபாடுகளின் சுவர் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான நீர்மின்சக்தித் தொழிலாளர்களில் அந்த இருவரும் அடங்குவர்.
9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |