ஏ-9 வீதித் திறப்பு புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாகப் பலத்தின் உச்சம்!
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக அதனைத்தொடர்ந்து 08.04.2002 அன்று – சரியாக இன்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன் – யாழ்ப்பாணத்தைப் பிற பிராந்தியங்களுடன் இணைக்கும் ஏ-9 வீதி திறக்கப்பட்டதானது வரலாற்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெறும் ஒரு கொரில்லா அமைப்பாக அன்றி ஒரு நிழல் அரசாங்கத்தைக் கட்டமைத்து ஆட்சியமைக்கும் தகுதியுடைய தரப்பாகச் சர்வதேச அரங்கில் உறுதிப்படுத்திய நிகழ்வாகும்.
இன்று 24 ஆண்டுகளின் பின் அதனையும் அதன் மூலோபாய முக்கியத்துவத்தையும் பேசுவது காலத்தின் ஒரு மீள்பார்வையாகக் கொள்ள முடியும்.
🛑 ஒரு தேசத்திற்கான அங்கீகாரம்
08.04.2002 அன்று ஏ-9 வீதி திறக்கப்பட்டதன் பின் வடபுலத்தில் ஓமந்தை முதல் முகமாலை வரையான ஒரு பரந்து விரிந்த நிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் பூரணமான கட்டுப்பாட்டில் இருப்பதை அன்று சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேசச் சமூகமும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டன எனலாம்.
அப்போது ஓமந்தையில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சுங்கவரி மற்றும் குடிவரவுத் திணைக்களம் (Immigration and Customs), ஒரு தனிநாட்டுக்கான எல்லைச் சாவடியைப் போலவே செயற்பட்டது.
அதேநேரம் தெற்கிலிருந்து வரும் மக்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் புலிகளின் கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவு (விசா) நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் நுழைந்தமை, புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பிற்குச் சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படக்கூடியதாக இருந்தது.
🛑நிதிப் பலம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு
ஏ-9 வீதித் திறப்பும் அதன் பின்னான கட்டமைப்பு உருவாக்கங்களும் விடுதலைப்புலிகளின் நிதி வருவாயை மிகப்பெருமளவில் வலுப்படுத்தின எனலாம். வரி வசூலிப்பு மூலமாக ஏ-9 ஊடாகப் பயணிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும் முறையான வரி வசூலிக்கப்பட்டது. இது இயக்கத்தின் கட்டுமானப் பணிகளுக்கும், சிவில் நிர்வாகத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தை வழங்கியது.
அதுமாத்திரமல்லாது பொருளாதார மேலாண்மை என்பது பெருங்கவனத்தைப் பெற்றது. வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரு நிலையான சந்தை வாய்ப்பை இந்தச் சம்பவம் உருவாக்கியதுடன் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கியத்துவம் உலகப் பொருளாதார வகுப்பிற்கு ஒரு பாடமாக மாறியது எனவும் குறிப்பிட முடியும்.
🛑 அரசியல் மற்றும் இராஜதந்திர மேலாதிக்கம்
யாழ்ப்பாண இராசதானியின் தலைநகரான நல்லூர் பகுதியில் அரசியல் அலுவலகங்களைத் திறந்ததன் மூலம் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த மக்களுடனும் நேரடித் தொடர்பை ஏற்படுத்த அரசியல்துறை போராளிகளால் முடிந்தது.
அதுமாத்திரமில்லாமல் பொங்கு தமிழ் போன்ற மக்களிடையேயான எழுச்சி நிகழ்வுகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் ஆதரவை அணிதிரட்டவும் இந்த வீதித் திறப்பு ஒரு வழிவகையை ஏற்படுத்தியது எனலாம்.
அதேநேரம் எரிக் சொல்ஹெய்ம் போன்ற சர்வதேச மத்தியஸ்தர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் தரைவழியாக வன்னிப் பெருநிலப்பரப்பினுள் நுழைந்து விடுதலைப்புலிகளின் தலைமையைச் சந்தித்தமை, அரசியல் சந்திப்புகளுக்கான நேரடி களம் திறக்கப்பட்டமை என்பன தமிழர் தரப்பைச் சிறிலங்கா அரசுக்குச் சமமான அரசியல் தரப்பாக மாற்றின.
🛑 மூலோபாய ரீதியான இடைவேளை
மிக நீண்டகாலமாகப் போரில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிப் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு ஓய்வுக்காலத்தையும் அதேவேளை தமது தற்காப்பு அரண்களைப் பலப்படுத்திக்கொள்ளவும் இந்தச் சமாதானக் காலமும் வீதித் திறப்பும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தன.
வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரு பலமான சிவில் நிர்வாகத்தை – அதாவது காவல்துறை, நீதிமன்றம், வங்கி என ஒரு நாட்டிற்கான கட்டமைப்புகளை – உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இந்த அமைதிக்காலம் பயன்படுத்தப்பட்டது.
🛑 தென்னிலங்கை மீதான உளவியல் தாக்கம்
ஏ-9 வீதி திறக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் வரிச்சீருடை அணிந்த போராளிகள் ஆயுதமின்றி யாழ்ப்பாண வீதிகளில் நடந்து திரிந்தமை தென்னிலங்கை அரசியலில் இருந்த சிங்களக் கடும்போக்கு முகங்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.
அப்போதைய புலிகளின் அரசியல் பலம் மற்றும் நிர்வாக ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கண்டு தென்னிலங்கைச் சமூகம் வியப்படைந்ததுடன் ஒரு பலமான தரப்புடன்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற உளவியல் அழுத்தம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டதே நிதர்சனமாகும்.
சுருக்கமாகக் கூறினால், 2002 ஆம் ஆண்டு ஏ-9 வீதித் திறப்பு என்பது வெறும் வீதிப் பயணத் தடையை நீக்கிய நிகழ்வு மட்டுமல்ல; அது தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேசத்தை ஆளும் தகுதியைக் கொண்டிருந்ததை உலகிற்கு நிரூபித்த ஒரு நிர்வாகப் பிரகடனம் என்றே சொல்ல முடியும். ஒரு விடுதலை அமைப்பு எவ்வாறு ஒரு சிவில் அரசாங்கமாக மாற முடியும் என்பதற்கான சிறந்த மூலோபாய உதாரணமாக இந்த வரலாற்றுத் தருணம் இன்றுவரை நோக்கப்படுகிறது என்பதே சாலப் பொருத்தமுமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |