சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை தோற்கடிக்க அனைத்துக் கட்சி அரசாங்கம் அவசியம் - வஜிர அபேவர்தன
அனைத்துக் கட்சி அரசாங்கம்
சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை தோற்கடிப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“சில சர்வதேச சக்திகள் இலங்கையை பலவீனமான நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றன. இவ்வாறான சக்திகளின் விருப்பங்களை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
இந்த விருப்பங்கள், இலங்கைக்கு தீங்கு விளைவிக்கின்றன.
ஆயுதம் ஏந்தினால் நடவடிக்கை
இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் சில சர்வதேச சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.
நாடு முழுவதும் சமீபத்திய போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியம். எனினும் அவர்கள் ஆயுதம் ஏந்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது வீதிகள் மற்றும் கட்டட நிர்மாணங்கள் குறித்து அல்லாமல், முக்கியமாக வரி மறுசீரமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்” என்றார்