சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க வதிவிட பிரதிநிதி!
இத்தாலி ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவன அதிகாரிகளை அவர் இதன்போது சந்தித்து பேசவுள்ளார்.
உதவித் திட்டங்கள் குறித்து ஆராய்வு
அத்துடன், மத்திய மாகாணத்திற்குச் சென்று பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள், சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் குறித்தும் ஆராயவுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதி மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய மூன்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறது.
அதேவேளை, அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய ஐக்கிய நாடுகளின் திட்டங்கள், நாடுகளின் உணவுப் பாதுகாப்பு, மனிதாபிமான நிவாரணம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.