அமெரிக்காவில் தொடரும் வன்முறை - வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்!
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்சினோ வைத்தியசாலை மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் அபாயநிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பிராங்கே உறுதிப்படுத்தியுள்ளார்.
கத்திக்குத்து
Ventura Boulevard 16200 பிளாக்கில் உள்ள வைத்தியசாலைக்கு பிற்பகல் 3:50 மணிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிரேக் மேடிசன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் இரண்டு செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
அறைக்குள் அடைக்கப்பட்ட சந்தேக நபர்
சந்தேக நபர், கத்தியுடன் வைத்தியசாலையில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டதுடன், வைத்தியசாலை கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நாட்களாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து தாக்குதல்கள் என பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் அப்பாவி பொது மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அண்மையில் டெக்ஸாஸ் தொடக்க பாடசாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.