ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடுதலை : அம்பலமான உண்மை
முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் (Milroy Fernando) மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் (Mary Juliet Monica) விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனியவின் வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2 பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதி மன்னிப்பு
எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து (Mahinda Rajapaksa) குறித்த பெண் ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றிருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.
குறித்த விடுதலை சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புடைய மன்னிப்பாக அறிவிக்கப்பட்டதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
வெசாக் போயா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவிக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷாரா உபுல்தெனிய (Thushara Upuldeniya) ஜூன் 9 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
