அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனடா அதிகபட்ச ஆதரவு - இலங்கைக்கு உறுதியளிப்பு..!
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனடா அதிகபட்ச ஆதரவை வழங்குமென கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் உறுதியளித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது, இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கனடா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருதரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து தொடரூந்துகளை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவை கனடா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு-கிழக்கு வாழ் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் எரிக் வோல்ஷ்க்கு விளக்கியுள்ளார்.
இதேவேளை, தற்போது கனடாவில் வாழும் இலங்கை வர்த்தகர்களுக்கு நாட்டில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
