அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான IRIB இடையே வெளிப்படையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளையும் மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தை பாதைக்கு கொண்டுவர சர்வதேச நடுநிலை முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.
கடந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஒளிபரப்பாமல் நீக்கியதாகக் கூறி, அரசு தகவல் கவுன்சில் வெள்ளிக்கிழமை IRIB மீது தணிக்கை செய்ததாக குற்றம்சாட்டியது.
நீக்கப்பட்ட ஒளிபரப்பு
இதற்கு பதிலளித்த IRIB, அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், நாட்டின் உயர்மட்ட ஆட்சித் தலைமைகளுக்கிடையே பிளவு இருப்பதாக தவறான எண்ணம் பொதுமக்களிடையே உருவாகாத வகையில் செயல்படுவது தங்களது பொறுப்பு என சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெசெஷ்கியான் தனது உரையில், கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போருக்குப் பிறகு, முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் பொதுவெளியில் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்று அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் உச்சத் தலைவரைச் சந்தித்து, ‘போர் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலைமை நாட்டுக்கு பாதகமாக இருப்பதாக விளக்கினோம்.
அதன்பின் அவர் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம்,” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துகள் இடம்பெற்ற பகுதியை ஒளிபரப்பிலிருந்து நீக்கியது, அரசுத் தலைவர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறைத் தலைவரின் சமீபத்திய கருத்துகள் தொடர்பாக அரசுத் தொலைக்காட்சி மேற்கொண்ட வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகம்மது பாகர் கலிபாஃப் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பகுதியும் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், நீதித்துறைத் தலைவர் கோலாம்-ஹொசைன் மொஹ்செனி-எஜெய், அதிபருக்கு ஆதரவு தெரிவித்து இந்த வாரம் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் ஒளிபரப்பப்படவில்லை என்றும் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |