திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பு உருவாக்கம்
திலீபனின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(17)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று மதியம் 2மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுக் கட்டமைப்பு
கடந்த கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கான அழைப்பாளர் குழு தெரிவு செய்யப்பட்ட நிலையில் அந்தக் குழு, கலந்துரையாடலில் பங்கேற்காத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நினைவேந்தலை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றையதினம் மதகுருமார்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.