டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேகநபர் தப்பியோட்டம் : காவல்துறை வலைவீச்சு
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்தபோது, பொதுமக்களின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
பின்னர் அவர் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் இன்று (27) அதிகாலை தப்பிச் சென்றுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்ய காவல்துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை மீண்டும் கைது செய்வதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |