நாமலை ஜனாதிபதியாக்கும் திட்டமே திருகோணமலை சம்பவம் : பகிரங்கப்படுத்திய தேரர்!
நாமல் ராஜபக்ச எனும் திருடனை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றவே இவ்வாறு இனவாதம் தூண்டப்பட்டு வருவதாக ராஜாங்கனை சத்தா ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் பதட்டமடையாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (17.11.2025) திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “சுய அரசியல் இலாபங்களுக்காகவே இவ்வாறான விடயங்கள் அரங்கேறி வருகின்றன.

ஜனாதிபதி இவ்விடயத்தில் தீவிர விசாரணையை முன்னெடுக்க வேண்டும். மதகுருமார் என்பதற்காக நாட்டை நாசமாக்க இடமளிக்க முடியாது.
ரணில் விக்ரமசிங்க என்னை சிறையில் அடைத்தது போல தற்போதைய ஜனாதிபதியும் இவ்விடயத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இந்நாட்டில் காணப்படக்கூடிய போதைப்பொருள், பெண்கள் மீதான அத்துமீறல்கள், கொலைகள், குற்றச் செயல்கள் தொடர்பில் பேச இவர்கள் எவரும் முன்வரவில்லை.
எனினும், தற்போது புத்தர் சிலையை பெரிய பிரச்சினையாக மாற்றி வருகின்றனர். புத்தர் எங்களது மனதில் தான் இருக்கிறார்.
புத்தர் சிலைகளை ஸ்தாபிப்பதை விட இந்நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன. அவற்றை தீர்க்க வேண்டும். இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆகவே, யாரும் இவ்விடயத்தில் குழப்பமடைய வேண்டாம் என நான் நாட்டு மக்களிடம் கோர விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 9 மணி நேரம் முன்