நல்லூரில் இன்றிரவு வாள்வெட்டு : இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்று இரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து சந்தேக நபர்கள் கைது
இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் கார்த்திகை திருவிழா
நல்லூரானின் கார்த்திகை திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் , வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்ட நிலையில் . ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற காவல்துறையினர் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்
அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , நோயாளர் காவு வண்டியில் , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பக்தர்கள் மத்தியில் அச்சம்
நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.
அதேவேளை ஆலய சூழலில் மாத்திரமே காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில் , நல்லூர் பின் வீதியில் உள்ள திருவிழா கால கடை தெருக்களில் , வன்முறை கும்பல்கள் , போதைப்பொருட்களை பாவிப்போர் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளதாகவும் , அது தொடர்பிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
