இலங்கை மீதான பயணத்தடையை நீக்குங்கள் - சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு அந்தந்த நாடுகளை வலியுறுத்தும் முயற்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜதந்திர சமூகத்தை சந்தித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. பல நாடுகள் தமது பிரஜைகள் இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
“இலங்கையில் சுற்றுலாத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை சந்தித்தேன். தற்போது பல நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள்/கட்டுப்பாடுகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்” என புதிய சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்வீட் செய்துள்ளார்.
இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹிரான் குரே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.
Met with the Diplomatic community in Colombo to discuss about reviving tourism in Sri Lanka. We made a request to lift the travel bans/restrictions currently imposed by several countries #VisitSriLanka pic.twitter.com/o616gpTSho
— Harin Fernando (@fernandoharin) May 24, 2022