யாழில் கனமழை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
வடக்கு, கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "மட்டக்களப்பில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 48 மணி நேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 36 மணி நேரத்தில் 125 மி. மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகின.
தொடர்ந்து இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நகர பிரதேசங்களை அண்மித்த - தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
எதிர்பார்க்கும் மழை கிடைக்கும்
எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அந்தக் கால பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.

இம்முறை மழையின் போக்கில் மிகப் பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது.
குறிப்பாக அதிகளவிலான மழையைப் பெறுகின்ற வவுனியா மற்றும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மழையைப் பெற்றிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நுண் காலநிலை வேறுபாடுகளை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்." - என்றுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகளவான பலத்த மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்