காசா மீது இஸ்ரேல் கொலைவெறித் தாக்குதல் : 57 பேர் பலி
காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தொடர் வான் வழி தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் அமைப்பிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-இல் இஸ்ரேல் மீது பலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது.
ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் போர்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50,752 பலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஹமாஸ் மீதான தாக்குதல்
அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. ஆனால், அதை ஹமாஸ் அமைப்பு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் (07.04.2025) கான் யூனுஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுற்றதை அடுத்து, ஒரு மாதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
