இத்தாலிய தூதரக அதிகாரியைப் போல் தன்னை அடையாளப்படுத்திய நபர்! லட்சக்கணக்கான பணம் மோசடி
இத்தாலிய தூதரக அதிகாரியைப்போல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கான பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இத்தாலிய தூதரகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குறித்த நபரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஆதியம்பலம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபரிடம் இருந்து இத்தாலிய தூதரகத்தால் வெளியிடப்படும் விசேட ஸ்டிக்கரைப் போன்ற 27 ஸ்டிக்கர்கள், போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இடம்பெற்ற மோசடி
நுவரெலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலிக்கு செல்வதற்கு தேவையான ஆவணங்களை இத்தாலிய தூரகத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.
எனினும், நீண்ட மாதங்கள் கடந்தும் எந்த வொரு பதிலும் கிடைக்காத நிலையில் இத்தாலிய தூதரகத்திற்கு வந்த போது குறித்த நபரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில்,
சந்தேக நபர் தான் தூதரகத்தில் பணிபுரிவதாகவும் அந்த பெண்ணிடம் இத்தாலி செல்வதற்கான அலுவல்களை விரைவாக செய்து முடிப்பதாக கூறி நான்கு லட்சத்து ஏழாயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.