தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை நசுக்கும் புதிய வியூகம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு, பல ஆபத்தான விடயங்களைக் கொண்டுள்ளதாகச் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்திருந்தது.
சிங்கள மொழி
ஆனால், அந்த வாக்குறுதி அவர்களின் சிங்கள மொழி மூலத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லை என ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது.

தற்போது அது வரைவு நிலையில் உள்ளது ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதும், அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையில்லை என்பதுமே தமிழர் தரப்பின் பரவலான நிலைப்பாடாக உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக்கோவை மற்றும் இதர சட்டங்களின் மூலமே போருக்குப் பின்னரான சமூக நிலைமையைக் கையாள முடியும்.
அதற்கெனத் தனியாக ஒரு சட்டம் தேவையற்றது. சர்வதேசச் சட்டங்களிலேயே 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கு முறையான வரைவிலக்கணம் இல்லாத நிலையில், இப்புதிய சட்ட வரைபில் எதனையும் உள்ளடக்கக்கூடிய வகையில் மிகவும் நெகிழ்வுப் போக்கிலான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடத் தடை விதித்தல் போன்ற அவசரகாலச் சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை நிரந்தரச் சட்டமாகக் கொண்டுவர இச்சட்ட வரைபின் மூலம் முயற்சிக்கப்படுகிறது.
அரகலய போராட்டத்தின் பயனாக உருவான இந்த அரசாங்கம், மீண்டும் ஒரு போராட்டம் உருவாவதைத் தடுக்கவே இச்சட்டத்தை உருவாக்குகிறது.

அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கமும் இதில் உள்ளது.
ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்ட வரைபைத் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டத்தை எதிர்ப்பதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தெரிவுநிலைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் (சர்வேஸ்வரன்) மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |