கனடாவில் வீதியில் சரிந்து விழுந்து உயிரிழந்த யாழ்ப்பாண தமிழர் : காவல்துறை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
கனடாவின் Brampton நகரில் திடீர் உடல்நலக்குறைவால் வீதியில் சரிந்த 30 வயது ஈழத் தமிழர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்காவல்துறை அலட்சியம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இறந்தவர் றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் பலாலியைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணம் St. Patrick’s College Jaffna பழைய மாணவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு முன்பு கிடைத்த கனடிய பிரஜாவுரிமை
மூன்று வாரங்களுக்கு முன்பு கனடிய பிரஜாவுரிமை பெற்றிருந்த இவர், விரைவில் தாயகத்திற்குச் சென்று தாயார் மற்றும் உறவினர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி மாலை 4.00 மணி முதல் 4.30 மணிக்குள், Queen Street and Kennedy Road intersection அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர் திடீரென கீழே விழுந்துள்ளார். இதனை கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக Peel Regional Police-க்கு தகவல் அளித்துள்ளார்.
காவல்துறையின் அலட்சியமான விசாரணை
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், முழுமையான சுயநினைவில் இல்லாத நிலையில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மதுபோதையில் இருப்பதாக கருதி அபராதச் சீட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னரே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வழங்கப்பட்டதால் அவசர சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் மது இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே அவர் விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்த அவர், மரணத்திற்குப் பிறகு ஆறு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை கோரப்பட்ட நிலையில், Peel Regional Police தாங்கள் உள்ளக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில் காவல்துறையின் பொய் அம்பலம்
முதற்கட்ட ஆய்வில், அவர் மதுபோதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட அபராதம் தவறானது என்றும் காவல்துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும் சிக்கல்கள் நிலவுகின்றன. சமீபத்தில் பிரஜாவுரிமை பெற்றிருந்ததால் தேவையான ஆவணங்கள் இல்லாமை பிரச்சினையாக உள்ளது.
மேலும், அவரது தாயார் கனடாவுக்கு வருவதற்கான ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படாத நிலையில் உள்ளன. இந்த சம்பவம் கனடாவில் வாழும் தமிழர்களிடையே கவலை மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவத்திற்கு முழுமையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |