யாழில் குறி வைக்கப்படும் வயோதிபர்கள் - மீண்டும் யாழில் அரங்கேறிய சம்பவம்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டில் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு, வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளார்.
திருட்டு முயற்சி
அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே, அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டினுள் இருந்து நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது வயோதிப பெண் அறை ஒன்றினுள் வைத்து பூட்டப்பட்டு இருப்பதனை அவதானித்து அறையை திறந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
அதேவேளை வீட்டில் இருந்த பொருட்கள் கலையப்பட்டு, காணப்பட்டன. அதனை அடுத்து , வீட்டில் இருந்து தப்பி சென்ற நபரை ஊரவர்கள் தேடி மடக்கி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அந்நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது பையில், பித்தளை பொருட்கள் சிலவும் காணப்பட்டுள்ளன.
மடக்கிப்பிடித்த மக்கள்
குறித்த நபரிடம் தன்னை அடையாளப்படுத்த கூடிய எந்த ஆவணங்களும் இருக்கவில்லை. அதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கி, காவல்துறையினரிடம் அந்நபரை ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்த கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
