கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த யாழ். வர்த்தகர்கள்
வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சியினால் (ITAK) முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு யாழ்ப்பாண (Jaffna) வர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கடையடைப்பிற்கு ஆதரவினை கோரும் வகையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது, திங்கட்கிழமை (18) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
செம்மணி விவகாரம்
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் வர்த்தகர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சில விடயங்களை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினர்.
இந்த கடையடைப்பை தமிழரசுக்கட்சி தனியாக முன்னெடுக்கின்றதா அல்லது அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து செய்கின்றதா என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முத்தையன்கட்டு பிரச்சினை மட்டுமன்றி செம்மணி பிரச்சினை, விகாரை பிரச்சினை போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் குறிப்பிட்டு அனைத்து கட்சிகளையும் சேர்த்து ஒரு அழைப்பு விட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என சுட்டிக்காட்டினர்.
நல்லூர் திருவிழா
15ஆம் திகதி திட்டமிடப்பட்ட கடையடைப்பு மடு மாதா திருவிழாவிற்காக 18 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இப்போது நல்லூர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தனர்.
கடையடைப்பு என்ற விடயத்தை நீங்கள் அறிவித்துள்ளீர்கள் ஆனால் இதில் முழுக்க முழுக்க சம்மந்தப்பட்டிருப்பது வர்த்தக சங்கம் தான். எனவே வர்த்தக சங்கங்களுடன் கதைத்து முடிவெடுத்த பிறகு அறிவித்திருக்க வேண்டும், நீங்கள் முடிவெடுத்து விட்டு அறிவிக்க முடியாது என குறிப்பிட்டனர்.
வியாபாரம் நன்றாக நடக்கின்ற இந்த பருவத்தில் கடைகளை பூட்டினால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



