சிக்கப்போகும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் : வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமார் 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணைக்குழுவில் (Election Commission of Sri lanka) நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதித் தேர்தலில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 13 வேட்பாளர்களுக்கு எதிராகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1,064 வேட்பாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 75,000க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 2,600க்கும் மேற்பட்டோர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. இவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுவது மாத்திரமே தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும். ஏனைய சபை நடவடிக்கைகளுக்கும் ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தேர்தல் ஆணைக்குழு
அவை மாகாண ஆணையாளர்களுடன் தொடர்புடையவையாகும்.உறுப்பினர்களது அரசியல் நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணைக்குழு தலையிடாது.
எனினும் கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது.
அதற்கமையவே தேர்தல் ஆணைக்குழு செயற்படும். அதனை விடுத்து அரசியல் விவகாரங்களில் எமது எவ்வித தலையீடும் இருக்காது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
