எரிபொருளுடன் மாத்திரை கலப்பு -பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு, எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தெரிவித்துள்ளது.
Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.
எவருக்கும் அனுமதி இல்லை

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வௌியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அத்தகைய மாத்திரை (Eco Tablet) சந்தையில் இருப்பதாகவும், சிபெட்கோவின் எரிபொருளுடன் அதனை கலப்பதற்கு எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆலோசனையையும் அல்லது ஒப்புதலையும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு

அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் தரமான முறையின்படி பரிசோதனை செய்யாமல், உள்நாட்டு சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோலில் குறைந்த ஒக்டேன் காணப்படுவதாக, குறித்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மக்களிடம் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.