பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.
உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு நிகழ்வுகள்
இன்று (18.05.2025) மாலை 5.15 மணியளவில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரித்தானிய கொடியினை சரோ பிரதேச கவுன்சிலர் சசி மயிலவாகனம் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை முகுந்தன் ஏற்றி வைத்தார்.
அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம்பெற்றது.
நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம்
அதனைத்தொடர்ந்து பிரதான நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச் செல்வம் உதய ராசா அவர்களின் புதல்வன் பவசுதன் உதயராசா ஏற்றி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இளையோரான செல்வி சௌமிகா புஷ்பராஜா ஆங்கிலத்தில் தன் உணர்வுகளை வெளி கொணர்ந்தார். அதனைத்தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையின் தனது உணர்வுகளை கவிதையாக செல்வி கிசானி விக்னேஸ்வரராஜா அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரை
தொடர்ந்து தொழிற்கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க பாலகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரையினை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுமியான செல்வி சானுகா தவராசா,முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை கவிதையாக தொகுத்து வழங்கினார்.
சம நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள பொது நினைவு தூபியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த மனிதம் வென்ற கணங்கள் எனும் நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது
இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








